Monday, October 31, 2011

பிரபல எழுத்தாளன் எழுதியது ( சவால் சிறுகதை-2011)

நான் திடீரென ஒரு பிரபல எழுத்தாளராகிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் இருங்கள். உடனே நான்வேலைவெட்டி இல்லாமல் இருப்பதாகத் தானே நீங்களே கற்பனை செய்கிறீர்கள். அது தான் இல்லை. நானும் ஒரு வேலை பார்க்கிறேன். என்ன வேலையா? இந்தக் காலத்தில் எங்கேயும் தென்படும் கணிபொறி வேலைபார்க்கும் இளைஞர்களில் நானும் ஒருவன்.

இப்போதெல்லாம் கணிப்பொறி வேலை என்று சொல்லும்போதே கொஞ்சம் மொக்கையாக இருக்கிறதல்லவா, அதனால் தான் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என முடிவு செய்தேன். அப்போது கிடைத்த ஐடியா தான் எழுத்தாளர் ஆவது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது கணிப்பொறியில் தான் விளையாடுகிறார்கள், வலைப்பூ, மின்னஞ்சல் மற்றும் வாசகர் வட்டம் என்று. அவர்கள் கணிப்பொறியை எடுத்துக் கொண்டதால் நான் எழுத்தை எடுத்துக்கொள்வதும் சரியானதே என முடிவு செய்தேன். பழிக்குப் பழி.


ஆனால் எனக்கு கிடைக்கும் நேரம் கொஞ்சம் தான். இருந்தாலும், சாப்பாட்டு இடைவெளியில் எழுதியே சாகித்ய ஆகாடமி விருது வாங்குவது தான் எனது லட்சியம்.



----


எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளருவதெல்லாம் பிடிக்காது. எப்படி "திடீர்" புகழ் அடைவது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபொழுதுதான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சர்ச்சை ஏற்பட்டது. வழக்கம் போல எழுத்தாளர் ஜெயராமன் ஒரு சர்ச்சை குண்டை வீசினார்.


அவர் சொன்னது இது தான் "கமல்ஹாசனை உலகநாயகன் என்றெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை வெறும் நாயகன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அதுவும் அவர் நாயகன் என்ற படத்தில் நடித்தார் என்பதற்காக. ஆனால் உலக நாயகன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள்!"


இந்தக் கருத்து தமிழ் இலக்கிய, பத்திரிக்கை மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் எழுத்தாளர் ஜெயராமனோ பின்வாங்குவதாக இல்லை. தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான தரவுகளையும் தந்தபடி இருந்தார்.


ஆனால் எதிர் தரப்பும் சும்மா இல்லை. ஜெயராமன் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் பதில்பதிவு போட்டு அவரது முகத்திரையை கிழிப்பதையே முழுநேர இலக்கியப் பணியாகக் கொண்ட எழுத்தாளர் தான் சூரப்புலி கோகுல். அவர் வழக்கம்போல ஜெயராமனின் இந்தக் கருத்தையும் பலமாக எதிர்த்தார்.


"நாயகன் படத்தில் நடித்ததால் கமல் நாயகன் என்றால், அதே பெயரில் ஜே.கே. ரித்திஷ் கூட ஒரு படம் நடித்து இருக்கிறார். அப்படியென்றால் கமலும் ரித்தீசும் இவரின் அளவுகோல்படி சமம் தானே? " என்ற கேள்வியை எழுப்பினார்.


ஆனால் எழுத்தாளர் ஜெயராமனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "சமம்". எல்லாவற்றிலும் ஒரு ரசனை தரம் பிரித்தல் இருக்கவேண்டும் என்பதே அவரது கருத்து. எல்லோரும் பிரம்மா. விஷ்ணு மற்றும் சிவன் என்று வழிபட்டுக் கொண்டிருக்க. எழுத்தாளர் ஜெயராமன் "விஷ்ணுதரம்" என்ற பிரம்மாண்டமான நாவலை எழுதினார்.

இந்த நாவலில் விஷ்ணுவின் தரம் பற்றியே ஒரு விவாதத்தை நடத்தியிருந்தார். இந்த நாவல் பெற்ற புகழால் எழுத்தாளர் ஜெயராமனின் வாசகர்கள் "விஷ்ணுதர வாசகர் வட்டத்தை" அமைத்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


இன்னொரு பரபரப்பு எழுத்தாளர் ஆறு. இந்தப் பிரச்சனையில் இவரின் ஆதரவு எப்போதும் சூரப்புலி கோகுலுக்கு உண்டு. ஆனால் இவர் நேரடியாக கருத்து சொல்வதில்லை. ஏனென்றால் ஜெயராமனின் எழுத்துக்களைப் படித்தாலே ஆறு தூங்கிவிடுவதுண்டு. அப்புறம் எப்படி பதில் எழுதுவது.
விவாதம் நடத்துவது?


----


இது இன்றைய இலக்கிய நிலைமை. இந்த சூழ்நிலையில் நானும் ஒரு பரபரப்பான எழுத்தாளராக ஆகவேண்டும் என்றால் இந்த மூன்று எழுத்தாளர்களை விட ஏதாவது செய்தால் தான் உண்டு . அப்போது தான் எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பது தெரிந்தது.


இப்படி பரபரப்பை உருவாக்கிவந்த ஜெயராமனுக்கும் ஒரு சோதனை வந்தது. அவர் வாசர்கள் உருவாக்கிய வாசகர் வட்டமான விஷ்ணுதர வாசகர் வட்டம் பற்றி பார்த்தோம் அல்லவா. அந்த ரகசிய வாசகர் வட்டத்தில் எழுதப்பட்ட பல மின்னஞ்சல்கள் எழுத்தாளர் ஆறுவின் தளத்திலும், சூரப்புலி கோகுல் தளத்திலும் வெளிவரத்தொடங்கின. விஷ்ணுதர நிர்வாகிகள் கொதித்து எழுந்தனர். கடுமையான நடவடிக்கை எடுத்து பலரை நீக்கினர். ஆனாலும் அதில் யாரோ ஒரு இன்போர்மேர் இருப்பது போன்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.


எழுத்தாளர் ஜெயராமன் வசனம் எழுதும் அடுத்த படத்துக்கான பெயர் அடுத்த வாரம் வெளியிடப் படும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் அதை முன்னடியே வெளியிட்டு ஜெயராமனின் முகத்திரையை கிழிக்கவேண்டும் என சூரப்புலி கோகுலும், எழுத்தாளர் ஆர்வம் கொண்டிருந்தனர். இதில் யார் முந்துவது என்ற போட்டிகூட இருந்ததாகக் கேள்வி (இதனால் எல்லாம் எப்படி முகத்திரை கிழியும் என்று யோசித்தால் நீங்கள் இலக்கிய உலக சர்ச்சைகளைப் பற்றி அறியாத அப்பாவி)


இந்த செய்தியும் விஷ்ணுதர வட்டத்திலிருந்து கசியும் வாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். இந்த நிலைமையை எனக்கு சாதகமாக பயன்படுதுக்கொள்ள தீர்மானித்தேன். எப்படியாவது அந்தப் பெயரை அவர்களுக்கு முன்னால் நான் வெளியிட்டால், தான் தான் தமிழ் இலக்கியத்தில் பரபரப்பான ஆள். எப்படி என் கணக்கு.


இப்போது என் கணிபொறி மூளையை பயன்படுத்த ஆரம்பித்தேன். எப்படியும் இந்த இருவருக்கும் விஷ்ணுதர வட்டத்தில் இருக்கும் ஒருவர் அதை அனுப்பி இருப்பார். அந்த மின்னஞ்சலை ஹேக் செய்தால் (கைப்பற்றினால்) போதும். வேகமாக இயங்கினேன். சிலமணிநேர முயற்சிக்குப்பின் அந்த இரண்டு மின்னஞ்சலுக்கும் வந்த எல்லா அஞ்சலையும் எடுத்துவிட்டேன். ஆச்சர்யம் ஒரே ஆள் இரண்டு பேருக்கும் "விஷ்ணு" என்ற பெயரில் மெயில் அனுப்பியிருந்தான். இவன்தான் அந்த இன்போர்மேர் போல.


இது சூரப்புலி கோகுலுக்கு அனுப்பிய மெயில்

"Mr கோகுல்,

s w H2 6F இது தான் குறியீடு கவலை வேண்டாம்"


இது எழுத்தாளர் ஆறுவுக்கு அனுப்பிய மெயில்


"sir, எஸ். பி. கோகுலிடம் தவறானக் குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்"


இவ்வளவு தூரம் வந்த என்னால் அந்தக் குறியீட்டிலிருந்து பேரைப் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்த எல்லா குறியீட்டு முறைகளிலும் முயற்சி செய்தேன். நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. விடிந்தால் அவர்கள் முந்திக் கொள்வார்களே என பயங்கர முயற்சி செய்தேன். அந்த மின்னஞ்சல் மூலம் மெயில் அனுப்பிய விஷ்ணுவின் தொலைபேசி எண்ணைக்கூட கண்டுபிடித்துவிட்டேன். இரண்டு முறை அழைத்தும் பலன் இல்லை. மீண்டும் அழைப்பு, மீண்டும் முயற்சி. உலகின் எந்த முறையிலும் கண்டுபிடிக்க முடியாததாக இருந்தது அந்த குறியீடு. அதை அச்சடித்து மேசையில் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன்.


--

தொலைபேசி அழைப்பு என் தூக்கத்தை கலைத்தது. அழைத்தது அதே விஷ்ணு. விடிந்து இருந்தது. இந்நேரம் பெயர் வெளியாகியிருக்கும். என்ன செய்வது. தொலைபேசியை எடுத்தேன்.




"நீங்க யார் சார். நெறைய மிச்செடு கால்ஸ் இருந்துச்சு..." என்றபடி ஆரம்பித்தான். நான் என் முழுக் கதையும் சொன்னேன்.


"ஹ ஹ... நானே ஒரு தில்லாலங்கடி... என்கிட்டேயேவா. விஷயம் போகவேண்டியவர்களுக்கு கரெக்டா போயுடுச்சு " என்றான்.


"அதெப்படிங்க.. குறியீடு கண்டுபிடிகிறது நான் ஒரு எக்ஸ்பெர்ட் (நிபுணன்). எனக்குத் தெரியாம என்ன குறியீடு அது" என்றேன் ஆர்வம் தாங்க முடியாமல்.


அவன் மறுபடியும் பெரிதாகச் சிரித்தான். "நான் தான் அது தவறான குறியீடு என்று சொல்லியிருந்தேனே. அதைப் படிக்கலையா நீ" என்றான். இப்படி சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தான்.


என்ன ஒரு அவமானம்!! இலக்கியத்தில் பரபரப்பைக் கிளப்பும் வாய்ப்பு போய்விட்டதே என்று எண்ணி சூரப்புலியின் தளத்தை திறந்தேன். அதிர்ச்சியானேன். ஆறுவின் தளத்தையும் திறந்தேன். அங்கும் சரியாக இருந்தது. நாமெல்லாம் என்ன தான் பகடி செய்தாலும் எழுத்தாளர்கள் எழுதாளர்கள் தான் என்று புரிந்தது.
எனக்கு தலை சுற்றியது.

ஆம் அந்தப் படத்தின் பெயர்
"கவலை வேண்டாம்!!"

5 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல முயற்சி, இலக்கிய உலகின் எழுத்தாளர்களுடைய சர்ர்சையை வைத்து கதை எழுதியிருக்கிறீர்கள்! நீங்கள் சொல்வது போல் (நீங்கள் இலக்கிய உலக சர்ச்சைகளைப் பற்றி அறியாத அப்பாவி) பலர் அப்பாவியாகவே உள்ளோம்,

சாப்பாட்டு இடைவெளியில் எழுதியே சாகித்ய ஆகாடமி விருது வாங்குவது தான் எனது லட்சியம்.

உங்கள் லட்சியம் ரசிக்கவைக்கிறது!

பறக்கும் குதிரை said...

கருத்துக்கு நன்றி நம்பிக்கை பாண்டியன் சார்...

middleclassmadhavi said...

Good story! Congrats!

bigilu said...

வாழ்த்துக்கள்... ஆறு என்று ஒரு எழுத்தாளரை குறிப்பிட்டு உள்ளீர்- அவராரு ???? :)

பறக்கும் குதிரை said...

@ bigilu
ஆறு.. அவராரு :)


ராஜேஸ்வரி, middleclassmadhavi.,

மிக்க நன்றி!!

Post a Comment